முகப்பு
இந்தியா

டி.எஸ்.பி. கொலை வழக்கு: ராஜா பய்யா மீது குற்றமில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி. ஜியா-உல் ஹக் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜா பய்யா மீது குற்றம் எதுவும் இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 12:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

உத்தரப் பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி. ஜியா-உல் ஹக் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜா பய்யா மீது குற்றம் எதுவும் இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் நீலகண்ட மணி திரிபாதி முன்பு வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. துணைக் குற்றப்பத்திரிகையை விசாரணை அதிகாரி சுரேந்திர சிங் குரும் தாக்கல் செய்தார்.

அதில் சிபிஐ தரப்பில் கூறப்பட்டிருந்ததாவது:

Advertisement

உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி பெற அமைச்சராக இருந்த ராஜா பய்யாவின் பெயரை பிரதாப்கார் மாவட்ட நிர்வாகத்திடம் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இதனை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

துப்பாக்கி அனுமதியை அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதன்அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களால் டி.எஸ்.பி தாக்கப்படும்போது, அவரைக் காப்பாற்றத் தவறிய காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோருக்கு அதிகபட்ச அபராத தொகை விதிக்க வேண்டும். ராஜா பய்யாவிடம் மேற்கொண்டு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ராஜா பய்யா நிருபர்களிடம் கூறுகையில், "கடைசியாக உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இக்கட்டான தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் குந்தா பகுதி மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் குந்து சிங், ரோகித் சிங், ஹரி ஓம் ஸ்ரீவஸ்தவா, குல்சன் யாதவ் ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கார் மாவட்டம் பாலிபூரில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி நான்கே யாதவ் கொல்லப்பட்டத்தை அடுத்து, அங்கு ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த குந்தா மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜியா-உல் ஹக் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர்.

போலீஸார் தாக்கியதில் நான்கே யாதவின் சகோதரர் சுரேஷ் யாதவ் (பின்னர் அவர் இறந்துவிட்டார்) படுகாயமடைந்தார். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியினர் தாக்கியதில் ஜியா-உல் ஹக் உயிரிழந்தார். இந்த வழக்கில் ராஜா பய்யா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.