முகப்பு
இந்தியா

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகள் வராத வகையில், இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 5:01 am IST
பகிர்:

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகள் வராத வகையில், இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் மாதம் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஆறு தேசிய கட்சிகள் மறைமுகமாக மத்திய அரசின் நிதியை பயன்படுத்துகின்றன.

Advertisement

Advertisement

எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அளிக்க வசதியாக, இந்தக் கட்சிகள் பொது தகவல் அதிகாரிகளை நியமித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அரசியல் கட்சிகளிடம் இருந்து மற்ற தகவல்களை பெறுவது போன்று நிதி தொடர்பான விவரங்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுப் பெறுகிறது. எனவே நிதியை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அரசியல் கட்சிகள் வாதிட்டன.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் துறையான பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, இதுபற்றி சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியது. இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்ப்பட்டது.

இந்தச் சட்ட திருத்தம் மூலம் அரசியல் கட்சிகள் தங்களது நிதி குறித்த தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், வேட்பாளர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்படுகின்றனர் என்ற தகவலை அளிக்கவும் விதிவிலக்கை பெற முடியும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மட்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த சட்ட திருத்தத்தை விரும்புவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.