முகப்பு
இந்தியா

மதிய உணவு திட்டம்: எம்.பி.க்களுக்கு அமைச்சர் பல்லம் ராஜு கடிதம்

பிகாரில் நிகழ்ந்த மதிய உணவு துயரச்சம்பவப் பின்னணியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு, மதிய உணவுத் திட்டச் செயலாக்கம் குறித்து மறுஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 12:20 am IST
பகிர்:

பிகாரில் நிகழ்ந்த மதிய உணவு துயரச்சம்பவப் பின்னணியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு, மதிய உணவுத் திட்டச் செயலாக்கம் குறித்து மறுஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்.பிக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களது தொகுதிகளின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விரைவில் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கண்காணிப்புக் குழுவில் எம்.பி.க்களும் இடம் பெற்றிருப்பார்கள். மாவட்டத்தின் மூத்த எம்.பி இக்குழுவின் தலைவராக இருப்பார்.

Advertisement

Advertisement

அவசர மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள், உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடு, அக்மார்க் தரத்திலான உணவுப் பொருள்களை வாங்குதல் போன்றவற்றின் அவசியத்தையும் பல்லம் ராஜு வலியுறுத்தினார்.

பள்ளிகளுக்கு உணவுப் பொருள்களை மாநில உணவுப் பொருள் வழங்கும் கழகங்கள் வாயிலாகவே அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உணவுப் பொருள்களின் தரம் மட்டுமின்றி, சுகாதாரமும் மிக முக்கியம் என்பதால், சமையலறை மற்றும் உணவுப் பொருள் கிடங்குகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் பல்லம் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி பிகாரில் மதிய உணவு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருந்ததால், அதைச் சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.