முகப்பு
இந்தியா

ஆசாராம் பாபுவிடம் ஜோத்பூர் போலீஸார் விசாரணை

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஜோத்பூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 5:33 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஜோத்பூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் போலீஸ் விசாரணக்கு ஆஜராகாததால் அவரை கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் இந்தூர் சென்றுவிட்டார். அங்கு அவரை கைது செய்த போலீஸார் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் ஜோத்பூர் கொண்டு வந்தனர்.

முன்னதாக, இந்தூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவக் குழு, ஆசாராம் பாபுவின் உடல்நிலையை பரிசோதனை செய்தது. பயணம் செய்யவும், விசாரணை நடத்தவும், அவர் உடல் தகுதியை பெற்றிருப்பதாக, மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர்.

Advertisement

இதையடுத்தே அவர் விமானம் மூலம் தில்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் மற்றொரு விமானம் மூலம் ஜோத்பூர் அழைத்து வரப்பட்டார்.

விமான நிலையத்தில் இருந்து, ஜோத்பூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் சதீஷ் ஜாங்கிட் தலைமையில், ராஜஸ்தான் மாநில போஸீஸாரின் பாதுகாப்புடன், ஆசாராம் பாபு ஜோத்பூர் அருகேயுள்ள மேண்டூர் ஆயுதப் படை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு எதிராக சிலர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜோத்பூர் விமான நிலையத்திலும், விசாரணை நடந்த ஆயுதப் படை முகாம் வளாகத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு ஆசாராம் பாபுவிடம் சுமார் 4 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒருநாள் போலீஸ் காவல்: விசாரணைக்குப் பிறகு ஆசாராம் பாபு, மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி (ஊரகம்) மனோஜ் கே. வியாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திக்விஜய் சிங் குற்றச்சாட்டு: ஆசாராம் பாபுவுடன் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு என்று திக்விஜய் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சிறுவர்கள் இருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விசாரணையை முதல்வர் நரேந்திர மோடி வெளியுலகுக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இது குறித்து டுவிட்டர் இணையதளத்தில் எழுதியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. தேவையில்லாமல் யாரும், யாரையும் இந்த இழுக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தை முடித்தார் சிறுமியின் தந்தை

16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சாமியார் ஆசாராம் பாபு, இந்தூரில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியிருந்த அந்தச் சிறுமியின் தந்தை தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசாராம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, வெள்ளிக்கிழமை மாலை ஜோத்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு ஆசாராமுக்கு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அந்தச் சிறுமியின் தந்தை சனிக்கிழமை காலை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையைக் காட்டும் விதமாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஆசாராம் பாபுவைக் கண்டித்து ராஷ்ட்ரீய மகிளா சக்தி தளம் உள்பட பல்வேறு அமைப்பினரும் பல இடங்களில் அவரது கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.