திருவனந்தபுரத்தில் 27-இல் மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா
திருவனந்தபுரத்தில், மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா இம்மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
திருவனந்தபுரத்தில், மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா இம்மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதிய சமூகநலத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வல்லிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி பீடம் ஆஸ்ரமம் உள்ளது. அதன் அருகேயுள்ள அம்ரிதா விஸ்வ வித்யாபீடப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த விழா "அம்ரிதாவர்ஷம்-60' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி, கல்வி முயற்சி தொடர்பான புதிய அறிவிப்புகள், கலாசார விருது அளிப்பு, ஆன்மிக நூல்கள் வெளியீடு, இந்தியாவின் கிராமப்புற மக்களின் மேம்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
Advertisement
விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் நிறுவனம் ரூ. 50 கோடியில் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை அளிக்கவுள்ளது.
மேலும், பிறந்த நாள் விழாவையொட்டி, மாதா அமிர்தானந்த மயி மடமும், மடத்தின் மற்ற அமைப்புகளும் இணைந்து ஓராண்டுக்குள் 6 மில்லியன் மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டுள்ளன. அவற்றில் 6 லட்சம் மரக்கன்றுகளை கேரளத்தில் நடத் திட்டமிட்டுள்ளன. இந்தத் தகவலை மாதா அமிர்தானந்தமயி பீடம் தெரிவித்துள்ளது.