புதுதில்லி: நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கருப்புப் பண புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளில் இந்தியா அதிக முதலீடுகளை செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2016-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார வளர்ச்சி, மேலும் வேகம் அடைந்து வரும் 2019-ஆம் ஆண்டுகளில் 7.7 சதவீதமாக உயரும் என்றும், உலகிலேயே தெற்காசியா பொருளாதார வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பபட்டுள்ளது.
மேலும், வறுமை ஒழிப்பு நடவடிக்கையாக சரியான நேரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த இருப்பதும் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வரும் என்றும் கொண்டு வரும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோன்று நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.17.5 லட்சம் கோடியாக உயரும் என தரக் குறியீட்டு நிறுவனமான "இக்ரா' தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.