5.6 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருட்டு: முகநூல் நிறுவனம் ஒப்புதல்
தகவல் திருட்டு விவகாரத்தால் இந்தியாவில் 5.62 லட்சம் முகநூல் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி
தகவல் திருட்டு விவகாரத்தால் இந்தியாவில் 5.62 லட்சம் முகநூல் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் முகநூல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை பிரிட்டனைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது. அப்போது லட்சக்கணக்கான முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் வாயிலாக அவர்களது விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அதை டிரம்ப்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, சம்பந்தப்பட்ட நபர்கள் வலைதளத்தைப் பயன்படுத்தும்போது, தனிப்பட்ட முறையில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசார விளம்பரங்களை பதிவேற்றி அவர்களைக் கவர்ந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் முகநூல் நிறுவனத்துக்கு அறிவிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பியது. பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைளில் அந்நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? தகவல் திருட்டு விவகாரங்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? என்பன குறித்த விவரங்களை அளிக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இந்தியாவில் தேர்தல் நடைபெற்றபோது இங்குள்ள பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகக் கையாளப்பட்டனவா? என்பது குறித்தும் மத்திய அரசு முகநூல் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், முகநூல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:
உலக அளவில் மொத்தம் 8.7 கோடி பேரின் முகநூல் விவரங்கள் தவறாகக் கையாளப்பட்டிருக்கின்றன. அவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கர்கள்தான்.
இந்தியாவைப் பொருத்தவரை தகவல் திருட்டால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 335 மட்டுமே. அதேவேளையில் 5.62 லட்சம் பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம்
எனத் தெரிகிறது. இதுதொடர்பான துல்லியமான விவரங்களை அறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.