இந்தியா

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: வழக்கு விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு

DIN

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதே போல, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமையும் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பு வழக்குரைஞர்களும் ஆஜராகி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கு டிசம்பர் 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT