பாரதிய ஜனதாவைக் கண்டு மம்தாவுக்கு பயம்: அமித் ஷா சாடல்
பாரதிய ஜனதாவைக் கண்டு மம்தாவுக்கு பயம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : பாரதிய ஜனதாவைக் கண்டு மம்தாவுக்கு பயம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த பட்சம் 22 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று அமித்ஷா இலக்கு வகுத்துள்ளார். அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். அதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று நாட்கள் யாத்திரையை மேற்கொள்ள பாரதிய ஜனதா திட்டமிட்டது.
ஆனால் பாஜகவின் யாத்திரைக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. அதனை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பாஜக முறையிட்டுள்ளது இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அப்படியொரு துரதிஷ்டவசமான சம்பவம் நேரிட்டால் யார் பொறுப்பு என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதே நேரம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனின்த்யா மித்ரா, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அரசின் பொறுப்பாகும் என்று வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து யாத்திரைக்கு அனுமதியளிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவைக் கண்டு மம்தாவுக்கு பயம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரதிய ஜனதாவைக் கண்டு மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, அவருடைய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது. தனக்கு மக்கள் ஆதரவு குறையும் என்ற அவருடைய அச்சத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் என்னிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது என்பது பொதுமக்களின் முடிவு. பாஜகவின் யாத்திரையை தடுப்பது என்பது எந்த பலனையும் அளிக்காது. இது பொதுமக்களை மேலும் கோபம் அடையத்தான் செய்யும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.