பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்போருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முக்தார் அப்பாஸ் நக்வி
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்போருக்கு, அடுத்த மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்போருக்கு, அடுத்த மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-ஆவது பிறந்ததினத்தையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நக்வி பேசியதாவது:
கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வாஜ்பாய்க்கு எதிராக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அதேபோல, தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக சதி திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
ரஃபேல் ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் துல்லியத் தாக்குதல் நடவடிக்கைகளால், தேச விரோத சக்திகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்புகள் தகர்ந்து விட்டன.
இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் மத்தியிலும், அவர்களுக்காக சதி திட்டம் தீட்டுபவர்கள் மத்தியிலும் விரக்தி ஏற்பட்டுள்ளது. அதனால்தான் துல்லியத் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சர்ச்சை ஏற்படுத்தினர். தேசத்தின் பாதுகாப்பில் கூட காங்கிரஸ் கட்சியினர் கேவலமான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தேசத்தின் பாதுகாப்புக்கு எதிரான அனைத்து சதி திட்டங்களும் முறியடிக்கப்படும். இதுமாதிரியான சதி திட்டங்கள் நீண்ட காலங்களுக்கு நிலைக்காது என்பதை காங்கிரஸ் உணர வேண்டும்.
4 நாள்கள் கடினமாக உழைத்து விட்டு 4 மாதங்கள் ஓய்வெடுக்க ராகுல் காந்தி சென்று விடுகிறார். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை மணி நேரம் கூட ஓய்வெடுக்காது உழைத்து வரும் பிரதமர் மோடியுடன் அவர் போட்டியிடுகிறார். மத்திய அரசின் நல்லாட்சி, பிரதமருக்கு எதிரான அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்துவிடும் என்று அவர் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.