உயர்கல்வி ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இயங்கும்
பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள உயர்கல்வி ஆணையம், சுதந்திரமான அமைப்பாக இயங்கும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள உயர்கல்வி ஆணையம், சுதந்திரமான அமைப்பாக இயங்கும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
உயர் கல்வி ஆணையத்தினால், மாநில உரிமைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, அதற்குப் பதிலாக உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், உயர் கல்வி ஆணையம் எதற்காக கொண்டுவரப்பட வேண்டும்? என்று மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: கடந்த 1956-ஆம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டது. அப்போது, 20 பல்கலைக்கழகங்கள், 500 கல்லூரிகள் இருந்தன. 2 லட்சம் மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது, 900 பல்கலைக்கழகங்கள், 40,000 கல்லூரிகள் உள்ளன. 3.5 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நாங்கள் உயர்கல்வி ஆணையத்தை அரசின் அதிகார அமைப்பாக மாற்றப்போவதில்லை. அந்த ஆணையம் சுதந்திரமான அமைப்பாகவே இயங்கும். உயர் கல்வி ஆணையத்தில் இரு பிரிவுகள் இருக்கும். அவற்றில் ஒரு பிரிவானது, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் பணிகளை மேற்கொள்ளும். மற்றொரு பிரிவு, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக இருக்கும்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வெளிப்படையான முறையில், தகுதியின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.
உயர் கல்வி ஆணையம் கொண்டுவரப்படுவதால், மாநில அரசுகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தினருக்கான இடஒடுக்கீட்டு முறையிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது.
கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி முறையைப் பின்பற்ற வேண்டும்; உயர் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் ஆகிய பணிகளை உயர் கல்வி ஆணையம் மேற்கொள்ளும்.
கல்வியாளர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் உயர் கல்வி ஆணைய வரைவு மசோதா-2018 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யக் கோரி, சுமார் 10,000 ஆலோசனைகள் வந்துள்ளன. திருத்தப்பட்ட வரைவு மசோதா, விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.