குஜராத் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகலப்பு!
குஜராத் சட்டப்பேரவையில் புதனன்று அமைச்சரின் உரையின் பொழுது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் புதனன்று அமைச்சரின் உரையின் பொழுது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதனன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.சி.பால்து வேளாண்மை சீர்திருத்தம் தொடர்பான அறிக்கை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அறிக்கையை வீசி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டிக்கும் விதமாக பாஜக எம்.எல்.ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாம் டுதட் திடீரென அவையில் இருந்த மைக் ஒன்றினைப் பிடுங்கி பாஜக எம்.எல்.ஏ ஜெகதீஷ் பஞ்சாலை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இருவரையும் சக உறுப்பினர்கள் விலக்கி விட்டனர்.
எம்.எல்.ஏக்கள் இடையேயான இந்த அடிதடியால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மொத்தமாக குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மாநில துணை முதல்வர் நிதின் படேல் கூறியதாவது:
சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை மட்டும் அவமானப்படுத்தவில்லை. சபையின் மாண்புக்கே இழுக்கு ஏற்படுத்தியுள்ளனர். தற்பொழுது சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டஎம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.