கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மைசூரில் உள்ள மஹாராணி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.
அதில், மாணவி ஒருவர் என்சிசி-யில் 'சி' தரச்சான்றிதழ் பெற்ற பிறகு கிடைக்கும் பலன்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு அப்படியென்றால் தனக்கு எதுவும் தெரியாது என்று ராகுல் பதிலளித்தார். இது நாடு முழுவதும் உள்ள என்சிசி மாணவர்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்று வருகிறது.
என்சிசி என்பது இத்தாலியில் இல்லை, அதனால் அதுகுறித்து அறிய வாய்ப்பில்லை. இந்திய பாதுகாப்புத்துறை, ராணுவம் குறித்து பேசுபவரு என்சிசி என்றால் எதுவெனத் தெரியாதாம். இந்த அடிப்படை விவரங்கள் கூட அறியாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வது அபத்தமானது என்பது போன்று சமூக வலைதள வாசிகள் கருத்துக்களை முன்வைத்தனர். அதுபோல 99 சதவீத அரசியல்வாதிகளுக்கு என்சிசி குறித்து தெரியாது. பக்தாஸ் போன்று பொய் பேசாமல், ராகுல் உண்மையை ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது என்பது போன்ற ஆதரவுகளும் பெருகி வருகின்றன.
இந்நிலையில், டேராடூனில் உள்ல என்சிசி கேடட் மாணவர் ஹார்திக் தாஹியா என்பவர் அளித்த விளக்கத்தில், தேசிய மாணவர் படை (என்சிசி) என்பது இந்திய நாட்டின் 2-ஆவது ராணுவம் போன்றது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் என்சிசி-யில் இடம்பெற்றுள்ளனர். சி தரச்சான்றிதழ் பெற்ற பின்னர் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி இந்தியாவை தலைநிமிரவைப்பது தான் எங்கள் முக்கிய கடமை. இந்த அடிப்படையாவது காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.