முகப்பு
இந்தியா

ஊழல் வழக்கு: சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு ஜாமீன் 

ஊழல் வழக்கில் கைது செய்யயப்பட்ட சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 31 அக்டோபர் 2018, 8:32 pm IST
பகிர்:

புது தில்லி: ஊழல் வழக்கில் கைது செய்யயப்பட்ட சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிபிஐ சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் இடம்பெற்றிருந்தார். மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, மொயின் குரேஷியின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த இடைத் தரகர் மனோஜ் பிரசாத் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்தது. அப்போது அவர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முன்னதாக, சனாவை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ 22-ஆம் தேதியன்று அதிரடியாக கைது செய்துள்ளது. அவரது நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் செவ்வாயன்று மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவருடைய தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'என்னை கைது செய்தது சட்டவிரோதமானது, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று' வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தேவேந்தர் குமாரின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை, மாறாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடுமையான நிபந்தனைகளுடன் தேவேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments