யாரையோ திருப்திபடுத்துவதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் சுவர் ஏறி குதித்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சூழலில், ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"இந்த சம்பவம் 2008-இல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 2017-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நான் 4 முறை சோதனைக்குள்ளாகியுள்ளேன். இந்திய வரலாற்றில் யாரும் 4 முறைக்கு மேல் சோதனைக்குள்ளானதில்லை. 20-க்கும் மேற்பட்ட சம்மனுக்கும் நேரில் ஆஜராகியுள்ளேன். ஒவ்வொரு விசாரணை அமர்விலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 மணி நேரம் இருந்துள்ளேன். 12 நாட்கள் சிபிஐக்கு விருந்தினராக இருந்துள்ளேன். ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில் இது வழக்கே இல்லை.
யாரையோ திருப்திபடுத்துவதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது. தொலைக்காட்சியில் ஒரு சில காட்சிகள் வருவதற்காக இப்படி செய்யப்படுகிறது. இது வழக்கமான விசாரணையாக எனக்குத் தெரியவில்லை.
இது ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல. கடந்தாண்டு எனக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்கே தெரியும். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
எனது தந்தை தலைமறைவாகவில்லை. இதற்கு முன் அவருக்குப் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகத சம்மன் என்று எதுவுமே நிலுவையில் இல்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் எந்தவொரு நபரும் தாமாக விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக வேண்டும் என்று சட்டரீதியாக எந்தவித நிர்பந்தம் கிடையாது. ஒரு தனிமனிதன் 24 மணி நேரம் யாருடனும் எதுவும் சொல்லாமல் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.
நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்" என்றார்.
இதையெல்லாம் யார் செய்கிறது என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், "பாஜகதான் இவையனைத்தையும் செய்கிறது. இதையெல்லாம் டொனால்ட் டிரம்ப் செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கிடையாது" என்றார்.