முரட்டுத்தனம், பயமுறுத்தலே மோடி அரசின் கொள்கைகள்: சோனியா காந்தி
முரட்டுத்தனம், வெற்றுப் பேச்சு, பயமுறுத்தல் ஆகியவையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் என ஐக்கிய
முரட்டுத்தனம், வெற்றுப் பேச்சு, பயமுறுத்தல் ஆகியவையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி, கட்சியில் இளைஞர்களையும், அனுபவம் மிக்க மூத்தவர்களையும் ஒருங்கிணைத்து கட்சிக்கு புத்துணர்ச்சியை வழங்கியிருக்கிறார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் தன்னம்பிக்கையுடனும், உத்வேகத்துடன் எதிர்கொள்ளவிருக்கிறோம்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலத் தேர்தலில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றி, கட்சிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இதற்கு முன்னர், ஆளும் பாஜகவினர் வெல்லவே முடியாத மாபெரும் சக்தியாக தங்களை சொல்லிக் கொண்டனர். ஆனால், அவர்களது கூற்றை ராகுல் காந்தி பொய்யாக்கியிருக்கிறார். தொண்டர்களை ஒருங்கிணைத்தும், உற்சாகப்படுத்தியும் இந்த சாதனையை அவர் செய்துள்ளார்.
மோடி தலைமையிலான இந்த ஆட்சியில், நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற தன்மை மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.
நமது அரசமைப்புச் சட்டத்தின் அடி நாதமாக விளங்கும் கோட்பாடுகள் அனைத்தும் மோடி அரசின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
நாட்டின் அதிகார அமைப்புகள் அனைத்தும் மழுங்கடிக்கப்படுகின்றன; அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுகிறார்கள்; மாற்றுக் கருத்து கொண்டவர்கள் நசுக்கப்படுகிறார்கள்; கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
முரட்டுத்தனம், வெற்றுப் பேச்சு, பயமுறுத்தல் ஆகியவற்றையே மோடி அரசு தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் குறிவைக்கப்படுகின்றனர். விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் விரக்தியடைந்துள்ளனர் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.