மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சமாஜவாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், எம்.பி.யுமான முலாயம் சிங் மக்களவையில் வாழ்த்து தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சமாஜவாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், எம்.பி.யுமான முலாயம் சிங் மக்களவையில் வாழ்த்து தெரிவித்தார். வணங்கிய கைகளுடன் மோடி அதை ஏற்றுக்கொண்டார்.
பாஜக எம்.பி.க்களும் மேஜைகளைத் தட்டி முலாயமின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முகம் வாடிய நிலையில் காணப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்துள்ள நிலையில், முலாயம் சிங்கின் கருத்தை அவர்கள் ரசிக்கவில்லை.
முன்னதாக, முலாயம் சிங் பேசியதாவது:
மக்களவையில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அவைக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். ஒவ்வொருவரையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
முலாயமுக்கு அருகில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். முலாயமின் பேச்சைக் கேட்ட அவர் சற்று பதைபதைப்புடன் காணப்பட்டார்.