முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரையால் காஷ்மீர் மக்களுக்கு பிரச்னை: மெஹபூபா முஃப்தி

அமர்நாத் யாத்திரையால் காஷ்மீர் மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமர்சித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:28 AM
பகிர்:

3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிப்பதற்காக இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் முன்பதிவு செய்துகொண்டுள்ளனர். 

பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள அமர்நாத் யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு யாத்திரை தொடங்கியது முதல் 36,309 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், காசிகுந்த் என்ற இடத்தில் இருந்து நஸ்ரீ வரை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் அவசரகால வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனங்கள் சென்ற பிறகே, மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரையால் காஷ்மீர் மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வருடம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.