புது தில்லி: முத்தலாக் மசோதா குறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எதிரெதிர் நிலை எடுத்துள்ள விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் செவ்வாயன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவைத் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
முன்னதாக மக்களவையில் இம்மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:
இந்த சட்டத்தின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த சட்டமானது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரே விவகாரத்தில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எதிரெதிர் நிலை எடுத்துள்ள விவகாரம் கட்சியினரிடையே தலைமையின் நிலைப்பாடு குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.