ராபர்ட் வதேரா முன்ஜாமீன் விவகாரம்: தில்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 27) விசாரணை நடத்தவுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 27) விசாரணை நடத்தவுள்ளது.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, லண்டன் சொத்துகள் தொடர்பாக தங்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேராவும், அரோராவும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.