கட்டண உயர்வு எதிரொலி: மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள்!
கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தில்லி பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 18ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய அன்று, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள், இன்று தலைநகர் தில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Advertisement
ஏற்கனவே, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. யுஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், ஏ.ஐ.சி.டி.யு தலைவர் சகாஸ்ரபுத்தே, யுஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இருந்த போதிலும், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பல்கலை.க்கு வருவதை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.