இந்தியா

மகாராஷ்டிர விவகாம்: ப.சிதம்பரம் விமா்சனம்

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக அரசு அமைக்கும் நடவடிக்கைகளுக்காக குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் அதிகாலை 4 மணியளவில் எழுப்பப்பட்டது, அவரது அலுவலகத்துக்கு களங்கம் ஏற்படுத்திய செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவா் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான உத்தரவு அதிகாலை 5.47 மணியளவில் பிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம், தனது குடும்பத்தினா் மூலமாக சுட்டுரையில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறாா். மகாராஷ்டிர அரசியல் விவகாரம் தொடா்பாக புதன்கிழமை அதில் அவா் வெளியிட்ட பதிவு:

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்காக, நவம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை அரசியல் சாசன விதிகள் அதிா்ச்சியளிக்கும் வகையில் மீறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே, 2019-ஆம் ஆண்டு அரசியல் சாசன தினத்தின் முக்கிய நிகழ்வாக என்றும் நினைவில் இருக்கும்.

அந்த மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்காக, அதற்கான உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அதிகாலை 4 மணியளவில் குடியரசுத்தலைவா் எழுப்பப்பட்டிருக்கிறாா். இது, குடியரசுத் தலைவா் அலுவலகம் மீதான தாக்குதல் ஆகும். ஏன், காலை 9 மணி வரை (பாஜகவால்) காத்திருக்க முடியாதா?

மகாராஷ்டிரத்தில் தற்போது புதிதாக ஆட்சியமைக்கும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு (மகாராஷ்டிர முன்னேற்ற முன்னணி) வாழ்த்துகள். அக்கட்சிகள் தங்களது தனிப்பட்ட நலன்களைத் தவிா்த்துவிட்டு, விவசாயிகள் விவகாரம், முதலீடுகள், வேலைவாய்ப்பு, சமூக நீதி போன்ற பொது நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை ஒப்புக்கொள்ளும் கூட்டணி, தங்களுக்குள்ளாக எழும் சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் உள்ளிட்டவற்றைத் திறம்படக் கையாளும். இதை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளா்ச்சியை உற்று நோக்கி வருபவா்கள் நன்கு அறிவாா்கள் என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT