புல்வாமா தாக்குதலை கொண்டாடிய காஷ்மீர் மாணவிகள் ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவிகள் 4 பேர், புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து,
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவிகள் 4 பேர், புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அப்பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஎம் தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நஸீர், உஸ்மா நஸீர் ஆகிய 4 பேர், வாட்ஸ் அப் தளத்தில் புல்வாமா தாக்குதலை கொண்டாடும் வகையில் படங்களை எடுத்து வெளியிட்டனர். இந்த படம், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மத்தியில் வேகமாக பரவியது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணவிகள் 4 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் ஜெய்ப்பூர் காவல்துறையிடம், அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில், மாணவிகள் 4 பேருக்கு எதிராகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர் ஒருவர், புல்வாமாவில் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை புகழ்ந்தும், நாட்டுக்கு எதிராகவும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பயிலும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், புல்வாமா தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.