தில்லியில் துப்புரவு பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
தில்லியில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுஇடங்களை தூய்மை செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளரான ராஜூ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பணியின்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மைப் பணியாளர் ராஜூவின் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
கரோனாவிற்கு எதிரான போரில், இதற்கு முன்பு பணியின்போது உயிரிழந்த மருத்துவர், தீயணைப்பு வீரர் ஆகியோருக்கும் முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.