ஹைதராபாத்: புகழ்பெற்ற குச்சுப்புடி நடனக் கலைஞர் ஷோபா நாயுடு (64) புதன்கிழமை காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை காலமானதாக, அவரது உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சத்தியபாமா, பத்மாவதி, மோகினி, பார்வதிதேவி, சாய்பாபா போன்ற பல்வேறு கடவுள்களைப்போன்று பாத்திரமேற்று நடனம் ஆடியுள்ளார் ஷோபா நாயுடு.
உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நடனப் பயிற்சியளித்துள்ளார்; அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை வழங்கி, பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ, ஆந்திர அரசின் விருதுகள், பல்வேறு அமைப்புகளின் விருதுகள் உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்ட செய்தியில், "குச்சுப்புடியின் தன்னிகரற்ற கலைஞர் ஷோபா நாயுடு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.