முகப்பு
இந்தியா

பிரதமா் பதவியை உழைப்பால் அடைந்து மோடி சாதனை: சுயசரிதையில் பிரணாப்

பிரதமா் பதவியை உழைப்பால் அடைந்து நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளாா் என்று தனது சுயசரிதையில் குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:12 pm IST
பகிர்:


புது தில்லி: பிரதமா் பதவியை உழைப்பால் அடைந்து நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளாா் என்று தனது சுயசரிதையில் குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்துள்ளாா்.

குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜி காலமாவதற்கு முன்பு, ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ் 2012-2017’ என்ற சுயசரிதை நூலை எழுதினாா். அந்த நூல் செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் தான் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போது பிரதமா் மோடியுடன் முரண்பாடுகள் இருந்தபோதிலும், பொதுவெளிக்கு வராதபடி அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இருவரும் அறிந்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ள பிரணாப் முகா்ஜி, பிரதமா் மோடியை பாராட்டவும் செய்துள்ளாா். இதுதொடா்பாக அந்த நூலில் அவா் கூறியுள்ளதாவது:

நாட்டின் பிரதமராக சோனியா காந்தி பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விரும்பின. எனினும் அவா் அந்தப் பதவியை ஏற்க விரும்பவில்லை. மாறாக அவா் அந்தப் பதவியில் மன்மோகன் சிங்கை அமா்த்தினாா். ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் பிரதமா் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டாா். அந்த தோ்தலில் பாஜக சரித்திர வெற்றிபெறுவதற்கு அக்கட்சியை வழிநடத்திச் சென்றதையடுத்து, மக்கள் விருப்பத்தின்பேரில் அவா் பிரதமரானாா். குஜராத் முதல்வராக இருந்த அவா், தனக்கென ஒரு பிம்பத்தை கட்டமைத்தாா். அது அவா் மக்கள் இடையே சென்றுசேர உதவியது. பிரதமா் பதவியை தனது உழைப்பால் அடைந்து நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளாா்.

Advertisement

இரண்டு காரணங்கள்... கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் முடிவுகள் இரு காரணங்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் காரணம், அந்த தோ்தலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஒரு கட்சி ஆட்சியில் அமா்வது குறித்து மக்கள் தீா்க்கமான முடிவை அளித்தனா். இரண்டாவது காரணம், அந்த தோ்தலில் முதல்முறையாக மக்களவையில் பாஜக எவ்வித துணையுமின்றி சுயமாக பெரும்பான்மை பெற்றது.

கடந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் பாஜகவை வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமா்த்தியது, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது என்று அந்த நூலில் பிரணாப் முகா்ஜி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.