ஜனவரி இறுதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இம்மாத இறுதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று
இம்மாத இறுதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. சொத்து விவரங்களைத் தெரிவிக்க தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐஏஎஸ் அதிகாரி பணியில் உள்ளவா்கள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினா் மற்றும் வேறு நபா்கள் பெயரில் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை இணையவழியில் தெரிவிக்கும் முறை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் சொத்து விவரங்களை சமா்பிக்க முடியும். ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் விவரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இதற்கான இணையவழி சேவை கிடைக்காது.
Advertisement
தகுந்த காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், மாநில தலைமைச் செயலகம் முதல் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 6,715 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. இப்போது 5,205 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனா். மீதமுள்ள இடங்கள் காலியாக உள்ளன என்றும் மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.