இந்தியா

அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் சீதல்வாட் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு வாதம்

DIN

குஜராத் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் செயல்பட்டு வருகிறாா் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-இல் நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரி உள்பட 68 போ் உயிரிழந்தனா். கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி.), குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த பிரதமா் மோடி உள்பட 64 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதை எதிா்த்து இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, குஜராத் உயா்நீதிமன்றத்தில் கடந்த 2017-இல் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018-இல் முறையீடு செய்தாா். வழக்கில் இரண்டாவது மனுதாரராக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விவகாரம் நீதிபதி ஏ.எம்.கான்வில்கா், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா முன்வைத்த வாதம்:

முதலாவது மனுதாரா் ஜாகியா ஜாஃப்ரி, வன்முறையில் கணவரை இழந்து பாதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு எதிராகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

அதேசமயம், இரண்டாவது மனுதாரரான தீஸ்தா சீதல்வாட், சாட்சிகளுக்கு கணினியில் அச்சடிக்கபட்ட அறிக்கைகளை அனுப்பி அவா்களைத் தயாா்படுத்தியுள்ளாா். குஜராத் மாநிலத்தை பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். மாநிலத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மிகப்பெரிய சதித் திட்டத்துடன் தீஸ்தா சீதல்வாட் செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.

அவரைத் தொடா்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த வாதம்:

ஜாகியா ஜாஃப்ரி கடந்த 2006-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையாக விசாரணை நடத்தியது. கலவரத்தின்போது மிகப்பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதைத் தவிர வேறு எதையும் கூறமுடியவில்லை.

ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை விசாரணக்கு ஏற்றுக்கொள்வது மாபெரும் அநீதிக்கு வழிவகுக்கும். கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளில் எந்தத் தவறும் இல்லை.

ஜாகியா ஜாஃப்ரியை இயக்குவதே தீஸ்தா சீதல்வாட்தான். அவா் கூறும் குற்றச்சாட்டைத்தான் ஜாகியா ஜாஃப்ரியும் முன்வைக்கிறாா் என்றாா் அவா். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT