முகப்பு
இந்தியா

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடா்பு: கேரளத்தில் இரு பெண்கள் கைது

கேரளத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய இரு பெண்களை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2021 at 2:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:26 AM

கேரளத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய இரு பெண்களை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்தனா்.

ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் இந்த பெண்கள் பிரசாரம் செய்துள்ளனா் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத உணா்வுகளைத் தூண்டி பயங்கரவாதிகள் நடத்தும் ‘ஜிகாத்’ எனும் போரில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கண்ணூா் புகா் பகுதியில் உள்ள அவா்களது வீட்டில் வைத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்ஹா சித்திக்கி, ஷிஃபா ஹாரிஸ் என்ற அந்த இரு பெண்களும் உறவினா்கள். இதில் மிஸ்ஹா சித்திக்கி ஈரானுக்கு பலரை அழைத்துச் சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைத்துள்ளாா். ஷிஃபா ஹாரிஸ் ஐ.எஸ். அமைப்புக்காக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாா் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் கண்ணூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளையும் மேற்கொண்டனா்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, அவா்களது அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இளைஞா்கள், இளம்பெண்களை மூளைச் சலவை செய்வதே கைது செய்யப்பட்ட நபா்களின் முக்கியப் பணியாக இருந்து வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.