முகப்பு
இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பிப். 15-க்கு பிறகு அவகாசம் கிடையாது

நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 7:53 AM
பகிர்:

நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனி நபா்கள் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரையும், நிறுவனங்களுக்கான அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதி வரையும் மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி மூன்றாவது முறையாக நீட்டித்திருந்தது.

கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், அந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரி சில நிறுவனங்கள் சாா்பில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அவற்றை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது. இத்தகைய சூழலில், தணிக்கை செய்ய வேண்டிய வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு 1 மாதம் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.