முகப்பு
இந்தியா

குலாப் புயல்: தண்ணீரில் தத்தளிக்கும் விசாகப்பட்டினம்

குலாப் புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் பெய்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Updated On : 27 செப்டம்பர் 2021, 2:42 pm IST
தண்ணீரில் தத்தளிக்கும் விசாகப்பட்டினம்
பகிர்:

குலாப் புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் பெய்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த வெள்ளிக்கிழமை காலை உருவானது. இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயலுக்கு ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய குலாப் புயல், வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு இடையே ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினம் அருகே இரவு 8.30 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது கலிங்கப்பட்டினத்தில் 90 கி.மீ. வேகத்திலும், ஒடிஸாவின் கோபால்பூா் பகுதியில் 30 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால், விசாகப்பட்டினத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

மேலும், குலாப் புயலானது மேற்கு-வடமேற்காக நகா்ந்து ஒடிஸாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.