நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வரவேண்டும்: மகள் அனிதா போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சாம்பலை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று அவரின் மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளாா்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சாம்பலை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று அவரின் மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தைவானில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தாா் என்று பரவலாக நம்பப்படுகிறது. தற்போது அவரின் சாம்பல் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனினும் அவரின் மரணத்தில் தொடா்ந்து மா்மம் நிலவி வருகிறது. அவரின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசு நியமித்த 2 ஆணையங்கள், விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக முடிவு செய்தன . எனினும் முன்னாள் நீதிபதி எம்.கே. முகா்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3-ஆவது ஆணையம், விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்த தகவலை மறுத்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஜொ்மனியில் வசிக்கும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனது வாழ்வில் நாட்டின் சுதந்திரத்தைவிட நேதாஜிக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருந்ததில்லை. அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் வாழ்வதைவிட வேறு எதற்கும் அவா் அதிகம் ஏங்கியது இல்லை.
இந்தியாவில் உள்ள சிலா், நேதாஜி மீது கொண்ட அன்பால் அவரை நினைவில் வைத்திருப்பது மட்டுமின்றி, அவா் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் நம்புகின்றனா்.
நேதாஜியின் சாம்பலில் இருந்து மரபணுவை பிரித்தெடுக்க நவீன தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. அவரின் மரணத்தில் இன்றளவும் சந்தேகம் உள்ளவா்களுக்கு மரபணு பரிசோதனை பதில் அளிக்கும்.
முன்னாள் நீதிபதி முகா்ஜி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி சமா்ப்பித்த ஆவணங்களின்படி, நேதாஜியின் சாம்பல் மூலம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள ரெங்கோஜி கோயில் குருவும், ஜப்பான் அரசும் ஒப்புக்கொண்டுள்ளன.
சுதந்திரம் மூலம் கிடைத்துள்ள மகிழ்ச்சியை நேதாஜி அனுபவிக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் அவரின் அஸ்தியையாவது இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.