முகப்பு
இந்தியா

ஹஜ் பயணம்: தெலங்கானாவில் இருந்து முதல் குழு புறப்பட்டது

தெலங்கானாவில் இருந்து ஹஜ் பயணிகளின் முதல் குழு திங்கள்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித யாத்திரைக்கு புறப்பட்டது. 

Updated On : 20 ஜூன், 2022 at 12:47 PM
பகிர்:

தெலங்கானாவில் இருந்து ஹஜ் பயணிகளின் முதல் குழு திங்கள்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித யாத்திரைக்கு புறப்பட்டது. 

சவூதி ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் 373 பயணிகள் இன்று காலை 5.55 மணிக்கு ஜித்தாவுக்கு புறப்பட்டனர் என்று தெலங்கானா மாநில ஹஜ் கமிட்டியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

முன்னதாக, நள்ளிரவு பயணிகள் ஏற்றிச் செல்லும் பேருந்துகளை மாநில உள்துறை முகமது மஹ்மூத் அலி மற்றும் மாநில ஹஜ் கமிட்டி தலைவர் முகமது சலும் ஆகியோர் நகரிலுள்ள ஹஜ் ஹவுஸில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். 

Advertisement

ஹஜ்ஜின் போது மேற்கொள்ளப்படும் சிறப்புப் பிரார்த்தனையான 'தல்பியா' கோஷங்களுக்கு மத்தியில் பயணிகள் ஆர்வத்துடன் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஹஜ் இல்லத்தில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வந்திருந்து ஹஜ் பயணிகளை வழி அனுப்பினர். 

முதல் விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து 211 பயணிகள் இருந்தனர், மீதமுள்ளவர்கள் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் சவூதி அரேபியா மற்ற நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகளை அனுமதிக்கவில்லை. 

இந்த ஆண்டு சுமார் 80,000 இந்தியப் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கரோனா நெறிமுறையைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு ஹஜ் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இந்தாண்டு 1,822 பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ல் 5000 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.