ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட அந்த மாநில அரசு புதன்கிழமை முடிவு செய்தது.
இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அமலாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கோனாசீமா மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மாநிலத்திலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தன.
இதையடுத்து, கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர், தலித் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். சில அமைப்புகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.