முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் மூன்று பேர் பலி, பலர் காயம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டு, காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் குறைந்தது 3 பேர் பலியாகினர்.

Updated On : 21 நவம்பர் 2022, 12:29 pm IST
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு, காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.
பகிர்:


ஜெய்ப்பூர்: ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டு, காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் குறைந்தது 3 பேர் பலியாகினர் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்கு ரயில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரை ரயில் நிலையத்தில் உள்ள பாலத்தின் மேல் ஏறிச் செல்லும் போது திங்கள்கிழமை காலை 6.45 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகள், ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்த பயணிகள் மீது மோதியதுடன், நிலையத்திற்குள் புகுந்து, காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்டர் மற்றும் நிலைய அதிகாரி அலுவலகத்தை இடித்து தள்ளியது.

இதில், ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்த பயணிகள் 3 பேர் இறந்தனர் 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும், இந்த சம்பவத்தில் நிலைய கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

மேலும், தடம் புரண்ட பெட்டிகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள் டிக்கெட் கவுன்டர் மற்றும் நிலைய அதிகாரி அலுவலகத்தில் மோதி இடித்து தள்ளியது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளதால் இரண்டு வழித்தடங்களும் தடைப்பட்டுள்ளதால் குறைந்தது 12 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் இறந்தவர்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

மேலும், மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அமைச்சர் பிரமிளா மல்லிக், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.