கறுப்பாக இருந்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!
கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளது.
கலபுரகி: கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளது.
ஜுவர்கியின், கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல்(32), யாத்கிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுக்காவைச் சேர்ந்த பர்சானா பேகம்(28) என்பவரை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கறுப்பாக இருந்த காரணத்தால் தன் மனைவியை அவ்வப்போது திட்டி தீர்த்துள்ளார். உன் முகத்துக்கு எவ்வளவு பவுடர் போட்டாலும், ஹீரோயினியாக மாட்டாய் எனக் கிண்டல் அடித்துள்ளார்.
Advertisement
ஒருகட்டத்தில் மனைவியைத் திட்டி சித்ரவதையும் செய்ததோடு, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பர்ஜானா தன் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன், பர்ஜானா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை, பால் வியாபாரி ஒருர் பர்ஜானா குடும்பத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த பர்ஜானாவின் பெற்றோர் குழந்தைகளை மீட்டு உடன் அழைத்துச் சென்றனர். காஜா படேல் தனது குடும்பத்தோடு தப்பியோடியுள்ளார்.
மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தகவலறிந்து வந்த ஜுவர்கி போலீஸார் உடலை மீட்டு பிரேசப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
வரதட்சணை, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருப்பதாகவும் கலபுர்கி கிராமப்புற டி.எஸ்.பி உமேஷ் சிக்மத் தெரிவித்தார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசித் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
மகளிர் துணைத் தலைவர் நீலா கூறுகையில்,
பர்சானாவின் மரணத்திற்கு காரணமாக படேலை கண்டறிய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவர் தற்கொலை செய்துகொண்டாலும், சித்திரவதை குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அந்த வழக்கு கொலை வழக்காகக் கருதப்படும்.
இந்தச் சம்பவம் குறித்து மகளிர் உரிமை ஆணையம் தானாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.