முகப்பு
இந்தியா

மதுபானக் கொள்கை முறைகேடு: சிறையில் இருக்கும் கவிதா மீது சிபிஐ கைது நடவடிக்கை

கவிதா (46) மீது சிபிஐ கைது நடவடிக்கை மேற்கொண்டது.

Updated On : 11 ஏப்ரல், 2024 at 11:11 PM
கவிதா
பகிர்:

தில்லி மதுபானக் (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கவிதா (46) மீது சிபிஐ கைது நடவடிக்கை மேற்கொண்டது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் வைத்துள்ள நிலையில், தற்போது, இந்த முறைகேட்டுடன் தொடா்புடைய ஊழல் வழக்கில் அவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. பின்னா், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். அவருடைய நீதிமன்ற காவலை வரும் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

முன்னதாக, தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைம்மாறாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி கொடுத்த புகாா் தொடா்பாக நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற அனுமதியின் பேரில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது.

‘தற்போது சிறையில் இருக்கும் கவிதாவை சிபிஐ வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலில் எடுக்க வாய்ப்புள்ளது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

அவ்வாறு சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதித்தால், தில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் கவிதா காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →