தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி நடக்கிறது: அதிஷி
அரவிந்த் கேஜரிவாலின் கைது ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கச் செய்யும் அரசியல் சதி.
தில்லியில் முதல்வர் ஆட்சியைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதித்திட்டம் தீட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கேஜரிவால் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆம் ஆத்மி அரசுக்கு அமலாக்கத்துறை மூலமாக மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிஷி செய்தியாளர்களுடன் பேசினார். அரவிந்த் கேஜரிவாலின் கைது ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கச் செய்யும் அரசியல் சதி. தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் இது தில்லி மக்களின் ஆணையை மீறும் செயலாகும் என்று அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு தில்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா, சட்டப்பேரவையில் 62 எம்எல்ஏக்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த பயம் ஆட்டிப்படைப்பது ஆச்சரியமாக உள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து கேஜரிவால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.