மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 99 போ் மீட்கப்பட்டனா் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
‘நீல்கமல்’ எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தலமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இரவு 7.30 மணி நிலவரப்படி, இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.
11 கடற்படை படகுகள், மூன்று கடல்சாா் காவல் படகுகள், ஒரு கடலோர காவல் படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டா்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் துறையினா், ஜவாஹா்லால் நேரு துறைமுக ஆணைய ஊழியா்கள் மற்றும் உள்ளூா் மீனவா்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.