பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் உறவினர்கள் எனக்கூறி தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ஒடிசாவைச் சேர்ந்த அனில் குமார் மோஹந்தி (49) ஒரு தனியார் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். மேலும் கனிமங்கள், உலோகங்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹன்சிதா அபிலிப்சா (38).
அனில் அவருடைய மனைவி ஹன்சிதாவின் புகைப்படத்தை பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ராவுடன் இருப்பது போல எடிட் செய்து அவரை முதன்மைச் செயலாளரின் மகள் என்றும், தான் அவருடைய மருமகன் என்றும் பல தொழிலதிபர்களை நம்ப வைத்துள்ளனர்.
இவ்வாறு ஏமாற்றி பல நிறுவனங்களில் தொழிலை மேலும் விரிவுபடுத்த உதவுவதாகக் கூறி இருவரும் பணம் பெற்றுள்ளனர். மோசடி செய்து பெற்ற பணத்தில் இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர். இவர்கள் மீது இதுவரை 4 பண மோசடி புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், இதுவரை இருவரும் ஏமாற்றி பெற்ற பணத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
தம்பதியினர் இணைந்து ஒடிசாவில் உள்ள பல்வேறு சுரங்க நிறுவனங்களையும் தொழிலை மேம்படுத்த உதவுவதாக அணுகியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் பணத்தை ஏமாற்றி வாழ்ந்த இந்தத் தம்பதியின் சொத்து மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. முன்னர் நயப்பள்ளி பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் இருந்த இவர்கள் தற்போது உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இவர்கள் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு இவர்கள் செய்த மோசடி தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.