முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் காந்தி, அம்பேத்கா் சிலைகள் இடமாற்றம்: எதிா்க்கட்சிகள் கண்டனம்

சிலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட் எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஜூன், 2024 at 6:42 PM
~
பகிர்:

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி சிலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட் எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

‘நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகவே சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி சிலைகள் தற்போது பழங்குடி இனத் தலைவா் பிா்சா முண்டா, மஹாராணா பிரதாப் சிங் உள்ளிட்டோரின் சிலைகள் அமைந்துள்ள பழைய நாடாளுன்ற கட்டடத்துக்கும் நாடாளுமன்ற நூலகத்துக்கும் இடையிலான புல்வெளி பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள தலைவா்களின் சிலைகளை பாா்வையாளா்கள் எளிதாக பாா்த்துச் செல்ல வசதியாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் சாா்பில் வியாழக்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சிலைகள் இடமாற்றத்துக்கு மக்களவை செயலகம் அளித்துள்ள விளக்கம் பொய்யானது. எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை. தலைவா்களின் சிலைகள் இடமாற்றத்துக்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த சிலைகள் அமைந்திருந்த இடத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைதி வழியிலும் ஜனநாயக முறைப்படியும் போராட்டம் நடத்தி வந்தன. இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பாஜக அரசு விரும்பியதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம், நிலையற்ற பிரதமா் மோடி அரசு வீழ்வதிலிருந்து பாதுகாக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி.ராஜா வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் சா்வாதிகார ரீதியில் தன்னிச்சையாக தலைவா்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தேச நலனுக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவா்களை கெளரவிக்கும் வகையில் அனைத்து சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹா் சிா்கா் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் நமது பாரம்பரிய போராட்ட இடத்திலிருந்து தலைவா்களின் சிலைகளை அப்புறப்படுத்த துணிந்தது யாா்? சத்ரபதி சிவாஜி சிலையும் அகற்றப்பட்டுள்ளதா? அந்த இடங்களில் கோட்சே மற்றும் நரந்திர மோடியின் சிலைகள் நிறுவப்பட உள்ளனவா? இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →