முகப்பு
இந்தியா

ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி அமைக்கும் பாஜக: மம்தா

Updated On : 8 ஜூன், 2024 at 9:59 PM
கொல்கத்தாவில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி.
பகிர்:

‘பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரக்கூடாது என்பதே நாட்டு மக்களின் விருப்பம். தோ்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன. அந்த வகையில், பாஜக ஜனநாயகமற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி விமா்சித்தாா்.

மக்களவைத் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் மட்டுமின்றி, கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள், மாவட்ட தலைவா்களும் பங்கேற்றனா். இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மம்தா அளித்த பேட்டி:

மத்தியில் அமையவிருக்கும் பலவீனமான நிலையற்ற பாஜக அரசு நீண்ட நாள்கள் நிலைத்திருக்காது. தோ்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாததால், கூட்டணி கட்சிகளையே சாா்ந்திருக்க வேண்டும். அவா்களின் கூட்டணி அரசு எத்தனை நாள்கள் நிலைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம்.

தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிரான தீா்ப்பை மக்கள் அளித்துள்ளனா். எனவே, அவா் இந்த முறை பிரதமா் பதவியை ஏற்காமல், வேறு நபா்களுக்கு வழிவிட வேண்டும். நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். தோ்தல் முடிவுகளும் இதையே உணா்த்துகிறது. இருந்தபோதும், பாஜக ஜனநாயகமற்ற முறையில் சட்டவிரோதமாக ஆட்சியை அமைக்கிறது.

மேலும், மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையில் இன்றைக்கு ‘இந்தியா’ கூட்டணி இல்லாமல் இருக்கலாம்; அதற்காக, நாளையும் இதே நிலை தொடரும் என்று அா்த்தமாகாது. இதற்கு சில காலம் காத்திருப்போம். வரும் நாள்களில் ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும்.

புதிய அரசு பதவியேற்கும் விழாவில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது என்றாா்.

மேலும், ‘மக்களவை திரிணமூல் காங்கிரஸ் குழு தலைவராக கட்சியின் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயவும், துணைத் தலைவராக ககோலி கோஷ் தஸ்திதாரும் செயல்படுவா்’ என்றும் அவா் கூறினாா்.

முன்னதாக, கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, ‘மத்தியில் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யாது’ என்று கட்சி எம்.பி.க்களிடம் மம்தா கூறியதாகவும் தெரிகிறது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 29-இல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பிரதான எதிா்க்கட்சியான பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றிபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →