தில்லியில் மிகக்கனமழை: சாலைகளில் வெள்ளம்; மூழ்கிய கார்கள்!
தில்லியில் மிகக்கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புது தில்லி: புது தில்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மிகக் கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் கடந்த ஒரு சில நாள்களாக கடும் வெப்பம் வாட்டிவதைத்து வந்த நிலையில், நேற்று முதல் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்ததே என்று மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள், சாலைகளில் வெள்ளம் தேங்க ஆரம்பித்தது. நேற்று முதல் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அதற்கேற்ப மக்கள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறு தில்லி போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியாகும் புகைப்படங்களும் விடியோக்களும் கனமழை காரணமாக தில்லி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.
புது தில்லி ரயில் நிலையம் அருகே செல்லும் பயணிகள், முழங்கால் அளவுக்கு தண்ணீரில் நடந்து செல்கின்றனர். பல இடங்களில் சாலை முழுவதும் வாகனங்கள் நின்றுள்ளன. வெள்ளம் சூழ்ந்திருக்கும் சாலைகளைக் கடப்பது எவ்வாறு என்று வாகன ஓட்டிகள் சாலைகளில் வாகனத்தோடு நின்றிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.