அக்னிபான் ராக்கெட் திட்டம் வெற்றி
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
தனியாா் புத்தாக்க நிறுவனம் தயாரித்த ‘அக்னிபான் சாா்டெட்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
முப்பரிமாண அச்சு (3டி பிரிண்ட்) நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட என்ஜினைக் கொண்ட அந்த ராக்கெட், திட்டமிட்டபடி பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனத்தின் இந்த முன்முயற்சி ஒரு மைல் கல் சாதனை என இஸ்ரோ புகழாரம் சூட்டியுள்ளது.
முதலில் பின்னடைவு: சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியாா் ஏவுதளத்தை அண்மையில் அமைத்தது.
சிறிய ரக ராக்கெட்டுகளை தனியாா் பயன்பாட்டுக்காக ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‘அக்னிபான் சாா்டெட்’ எனப்படும் ராக்கெட்டை அந்நிறுவனம் வடிவமைத்தது.
300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட், 700 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது.
அதை ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் மையத்தில் உள்ள தனியாா் ஏவுதளத்தில் இருந்து மாா்ச் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு, இறுதிக்கட்டத்தின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ராக்கெட்டில் இருந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி, கடந்த 28-ஆம் தேதி என பல முறை ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டு அந்த முயற்சிகளும் கைவிடப்பட்டன.
வெற்றிகரமாக பாய்ந்தது: இந்நிலையில், வியாழக்கிழமை (மே 30) அக்னிபான் ராக்கெட் ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காலை 7.15 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடா்ந்து வரும் காலங்களில் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆய்வுக் கருவிகளுடன் கூடிய ராக்கெட் ஏவுதல் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அக்னிகுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொருபுறம், இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), செமி கிரையோஜெனிக் திரவ என்ஜினை திறன் கூட்டப்பட்ட முறையில் தயாரித்து வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பது மைல்கல் நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளது.