தில்லியில் சமூகப் பணி ஆராய்ச்சியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை!
தில்லியில் ஒடிஷாவைச் சேர்ந்த சமூகப் பணி ஆராய்ச்சியாளரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவர் கைது
தில்லியில் முதுகலைப் பட்டதாரியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஷாவைச் சேர்ந்த சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்று, 8 ஆண்டுகளாக சமூகப்பணி ஆற்றிவந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த மே மாதத்தில் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், தில்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ஜூன் 9 ஆம் தேதியில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், அக். 10 ஆம் தேதியில் தில்லி ரயில் நிலையத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த பிரமோத் பாபு என்பவர், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க, அங்கிருந்த மாற்றுத் திறனாளியான பிச்சைக்காரர் முகமது ஷம்சுலையும் குற்றச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தினைக் கண்ட பிரபு மஹ்தோ என்பவரும் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், சராய் காலேகான் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ரத்தப்போக்குடன் இருப்பதாக அக். 11 ஆம் தேதியில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமலும் இருந்துள்ளார். இதனையடுத்து, பெண் காவல் அதிகாரி ஒருவர் சமூக ஆர்வலரைப்போல் வேடமிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பழகி, பெண்ணிடம் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளார். விசாரணையில், பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டதாகவும், மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிக்க: டொனால்ட் டிரம்ப் பற்றி பாபா வங்கா கணித்ததும் நடந்ததும்!
இதனைத் தொடர்ந்து 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 700 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், 150க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அக். 30 ஆம் தேதியில் ஆட்டோ ஓட்டுநர் பிரபு மஹ்தோவை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, நவ. 2-ல் பிரமோத் பாபு மற்றும் நவ. 4-ல் முகமது ஷம்சுலையும் கைது செய்தனர்.
உத்கல் கலாசாரப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பாதிக்கப்பட்ட பெண், எய்ட்ஸ் நோயாளிகள் குறித்து கலிங்கா நெட்வொர்க்கில் ஆராய்ச்சியாளராகவும், சுகாதார விழிப்புணர்வுக்கான மகளிர் அதிகாரத்தின் சமூகத் தலைவராகவும், பூரியில் உள்ள ஒன் ஸ்டாப் மையத்தில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.