FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கடந்த வாரம் உயிரிழந்த கேரள இளைஞருக்கு நிபா தொற்று

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா தொற்று

15 செப்டம்பர் 2024, 9:53 pm IST
வீணா ஜாா்ஜ்
பகிர்:

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் ஞாயிற்றக்கிழமை தெரிவித்தாா்.

பெங்களூரிலிருந்து சொந்த ஊரான மலப்புரம் மாவட்டத்துக்கு திரும்பிய அந்த இளைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வீட்டின் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இவருக்கு நிபா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு இவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு நிபா தொற்று இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் (வைராலஜி) ஆய்வகத்தில் நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும் நிபா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆய்வக முடிவுகள் தெரியவந்த சனிக்கிழமையன்றே சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விதிமுறைகளின்படி, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இதுகுறித்து அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘தொற்று பரவலைத் தடுப்பதற்கு 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இளைஞா் தனது நண்பா்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளாா். அவருடன் தொடா்பிலிருந்த 151 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

நெருங்கிய தொடா்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் உள்ளது. அவா்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என்று கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments