முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

Updated On : 1 ஏப்ரல், 2025 at 12:29 PM
மக்களவை
பகிர்:

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு அவை நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கின.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததற்கு வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர்.

இதனால், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மோகன்லாலை தாக்குவது குறித்து விமர்சிக்க வேண்டும் என்று இடதுசாரி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால், மாநிலங்களவையில் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதால், இடதுசாரி எம்பிக்கள் அவையைவிட்டு வெளியேறினர். அதேபோல், வாக்குச் சீட்டு முறைகேடு குறித்து விவாதிக்க மறுத்ததால் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும் சமாஜவாதி எம்பியுமான ராம்ஜி லால் சுமனின் வீட்டை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான எம்பிக்கள் மக்களவையில் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்களவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.