கமல் மன்னிப்பு கேட்டே ஆகணும்! -கர்நாடக திரைப்பட சம்மேளனம் திட்டவட்டம்
கன்னட மொழி சர்ச்சை ’தக் லைஃப்’ வெளியாவதில் சிக்கல்...
பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்குப்பின் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசன் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக திரைப்பட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்னட மொழி குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், கமல் தரப்பில் நேரடியாக மன்னிப்புக் கேட்காததால், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் வெளியாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் ஜூன் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டிருப்பதுடன், கர்நாடக திரைப்பட சம்மேளனத்துடன் பேசவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (ஜூன் 3) மாலை கர்நாடக திரைப்பட சம்மேளன ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எங்களிடம் பேச்சு நடத்த வந்தால் நாங்கள் அதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ’தக் லைஃப்’ படத்தை திரையிட அனுமதிப்போம்.
ஜூன் 10 வரை கமல் தரப்பில் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் எங்கள் தரப்பிடம் மன்னிப்பு கேட்க அழைத்தால் நாங்கள் அதற்கு உடன்படுவோம். ஆனால், அவர் தெளிவாக ’மன்னிப்பு’ என்ற சொல்லை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை, 10-ஆம் தேதிக்குப் பின்னரும் அவர் மன்னிப்பு கோராவிட்டால், படத்தை அதன்பின்னரும் திரையிட அனுமதிக்க மாட்டோம். இதனை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.