கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?
ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணால், 40 பேர் மொட்டையடித்து பரிகார பூஜை
ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடித்து, பரிகார பூஜை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒடிஸா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலினத்தவர் ஒருவரை காதலித்துள்ளார்.
ஆனால், வேற்றினத்தவரை தங்கள் இனப் பெண் திருமணம் செய்தல் கூடாது என்று பெண்ணின் சமுதாயத்தில் வழக்கமாக உள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, வேற்றினத்தவரை திருமணம் செய்து கொண்டால், தெய்வத்தின் கோபத்துக்கு குடும்பத்தினர் ஆளாகி விடுவர் என்ற மூடநம்பிக்கையும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.
Advertisement
இருப்பினும், தனது குடும்பத்தினர், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, வேற்றினத்தவரை பழங்குடிப் பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில்தான், வேற்றினத்தவரை திருமணம் செய்த பெண்ணால், தங்கள் சமுதாயத்தினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கோயிலில் பரிகார பூஜையையும் நடத்தியுள்ளனர்.
அதாவது, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 40 பேர் சேர்ந்து, பரிகார பூஜை என்ற பெயரில், கோயிலில் மொட்டையடித்துள்ளனர். அதுமட்டுமின்றி கோழிகள், ஆடுகள், பன்றிகளை பலிகொடுத்து, கிராமத்துக்கு விருந்தும் ஏற்பாடு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்த விடியோ, சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்