முகப்பு
இந்தியா

உ.பி.யில் மனைவி, மகனின் கல்லறைகளுக்கு இடையே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மனைவி, மகனின் கல்லறைகளுக்கு இடையே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரால் பரபரப்பு நிலவியது.

Updated On : 7 ஜூன் 2026, 3:05 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் மனைவி, மகனின் கல்லறைகளுக்கு இடையே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரால் பரபரப்பு நிலவியது.

உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தின் சர்காரி நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுப்ஹான் அகமது(40) வெள்ளிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் 11 நாட்களுக்குள் அந்தப் குடும்பத்தில் நிகழ்ந்த மூன்றாவது பலி இதுவாகும். சுப்ஹான் தனது மனைவி ரஜியா காதுன் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளான ஹசனன், சைப், ரோஷ்னி மற்றும் ஆலியா ஆகியோருடன் வசித்து வந்தார். ஆறு வயது மகனான ஹசனன் கடந்த மே 25ஆம் தேதி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டான்.

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே அந்தச் சிறுவன் பலியானான். மகன் இறந்த துக்கத்தில் தாய் ரஜியாவும் பலியாகிவிட்டார். தாயும் மகனும் ரஜியாவின் குடும்பத்தினர் வசிக்கும் சர்காரி நகரில் உள்ள மயானத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு, சுப்ஹானும் அவரது மூன்று குழந்தைகளும் சர்காரியில் உள்ள அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தனர். சுப்ஹான் தினமும் தனது மனைவி மற்றும் மகனின் கல்லறைகளுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

வழக்கம்போல் வெள்ளிக்கிழமையும் கல்லறைகளுக்குச் செல்வதாக கூறிவிட்டு சுப்ஹான் வீட்டிலிருந்து புறப்பட்டார். பல மணி நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். மயானத்திற்குச் சென்று பார்த்தபோது, ​​அங்குள்ள இரண்டு கல்லறைகளுக்கு இடையே சுப்ஹான் அசைவற்ற நிலையில் கிடப்பதை அவர்கள் கண்டனர். குடும்பத்தினரின் கூறுகையில், மயானத்தில் அவரது ஒரு கை மனைவியின் கல்லறையின் மீதும், மற்றொரு கை அவரது ஆறு வயது மகனின் கல்லறையின் மீதும் இருந்ததாகத் தெரிகிறது.

சுப்ஹான் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கெனவே அவர் பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சுப்ஹானின் காலில் பூச்சி கடித்தது போன்ற ஒரு தழும்பு இருப்பதைக் கவனித்ததாக அவரது மைத்துனர் சலீம் தெரிவித்தார். இதையடுத்து குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, உடற்கூராய்வு செய்யக் கோரினர். சர்காரி காவல் நிலைய அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், சுப்ஹான் தீவிர வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்தார்.

"அவரது காலில் விஷப் பூச்சி கடித்ததாக சந்தேகிக்கப்படும் தழும்பு உள்ளதாக குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். உடற் கூராய்வு அறிக்கை வந்த பிறகே பலியானதிற்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்று பிரவீன் குப்தா தெரிவித்தார். உடற்கூராய்வு முடிவடைந்து, வெள்ளிக்கிழமை மாலை சுப்ஹானின் உடல் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 11 நாட்களுக்குள் அடுத்தடுத்து மூன்று குடும்ப உறுப்பினர்கள் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

A cancer-stricken man was found dead between the graves of his wife and young son in the Mahoba district here, barely 11 days after the duo passed away, police and family members said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.